Wednesday, June 17, 2015

என் சிற்பி

 எனது வாழ்க்கைப் பக்கத்தின் தொடர்ச்சி....

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்து எனக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதும் திறமையையும் வளர்த்த ஒரு நல்லவரைப் பற்றி எழுதுவது எனது கடமை என்று எண்ணுகிறேன். அவரைப் பற்றி எழுதாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன். 

அவர் பெயர் ஆர். பசுபதி.அரியலூரில் ரெவென்யூ டிவிஷனல் அதிகாரியாக (ஆர் டி ஒ) பணியாற்றியவர். அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நான் எப்போதும் தலை நிமிர்ந்தே நடப்பேன். வேகமாக நடப்பேன். அடிக்க வருவதுபோல வருகிறாயே என்று நண்பர்கள் கூறுவர். கல்லூரியிலிருந்து வேலைக்குச் சென்றதால் அதிகாரிகளிடம் நடந்துகொள்ளும் விதம் தெரியாது. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது குட் மார்னிங் சொல்லும்படி அறிவுறுத்துவார் பசுபதி.அதிகாரிகளிடம் பேசும்போது நீ அல்லது நீங்கள் என்று சொல்லக்கூடாது என்பார். உதாரணமாக என்னுடன் பேசும்போது ஆர் டி ஒ அப்படி கூறினீர்கள், அதைச் செய்யச் சொன்னீர்கள் என்று கூற வேண்டும். என்ன அவசரமாக இருந்தாலும் நான் மேடையில் அமர்ந்து கோர்ட் நடக்கும்போது குறுக்கே வருவது பைல்களை மேஜையில் வைப்பது கூடாது.  அது கோர்ட்டை அவமதிக்கும் குற்றமாகக் கருதப்படும். கோர்ட்டை முடித்துவிட்டு எனது ஓய்வரைக்குச் சென்ற பின்னரே அங்கு வந்து என்னைப் பார்க்கலாம்.பேசலாம் பைல்களில் ஒப்பம் பெறலாம். இதையெல்லாம் கேட்ட பின்னர்தான் நான் மேலதிகாரிகளுடன் மரியாதையுடன் நடந்துகொள்ளும்  விஷயத்தை அறிந்து கொண்டேன். அதன்படி நடந்தேன்.

அவர்  நன்றாக டென்னிஸ் ஆடுவார். அலுவலகத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் சக அதிகாரிகளுடன் விளையாடுவதைப்  பல முறை கண்டிருக்கிறேன்.வீட்டுக்குப் போகும்போது என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவார். அதே நேரம் தன் வீட்டுக்குச் செல்ல அரசு வாகனத்தை பயன்படுத்தமாட்டார். தனது சைக்கிளிலேயே செல்லுவார். நான் வேகமாக நடப்பதால் அவர் சைக்கிளை  விட்டு இறங்கி முகம் அலம்பும் சமயம் அவர் வீட்டிற்குச் சென்று அமர்ந்துவிடுவேன். சீக்கிரம் வந்திட்டீங்க என்று கூறி வெளியே ஏதாவது சைக்கிள் இருக்கிறதா என்று கேட்பார். நடந்தே வந்துவிட்டேன். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பேன். இன்றுவரை நான் சைக்கிள் ஒட்டியதே இல்லை. ஒட்டவும் தெரியாது.

அன்றைய பைல்களில்  ஒன்றில் ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதுவார். மற்றொரு பைலை என்னிடம் கொடுத்து இதைப் படித்து  ஆங்கிலத்தில் அறிக்கையை எழுதும்படி கூறுவார். எழுதியவுடன் அதை வாங்கிப் படித்து திருத்தங்கள் செய்து மீண்டும் புதியதாக எழுதச் செய்து ஒப்பமிடுவார். பிறகு இன்றைக்கு இது போதும் நாளைக் காலை 7 மணிக்கு வாருங்கள் மற்ற பைல்களிலும் அறிக்கை எழுதலாம் எனக்கூறி அனுப்பிவிடுவார்.

அப்போது எனக்கு திருமணமாகவில்லை. எனவே நண்பர்களுடன் தங்கியிருந்த ரூமிற்கு சென்று விடுவேன். காலையில் 7 மணிக்கு  வீட்டுக்குச் சென்று மேஜையில் இருக்கும் பைல்களில் அறிக்கை எழுதி அவரின் ஒப்புதலைப் பெறுவேன். பரவாயில்லையே. நான்  திருத்த வேண்டிய அவசியமே இல்லாமல் முழுமையாக எழுதி இருக்கிறீர்களே என்பார். எனக்கு காபி கொடுக்கும்படி கூறிவிட்டு குளிக்கச் சென்று, குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வந்து அமர்வார். குனிந்து கொண்டே இருப்பவர், திடீரென 'நாராயணசாமி ஐயங்கார் வருகிறார்' என்பார்.

அரியலூரில் தாசில்தாரின் மேனேஜராக பணிபுரிந்தவர்தான் நாராயணசாமி ஐயங்கார்.  அவர் வந்ததும்  என்னிடம் இந்த ரிப்போட்டுகள்  எல்லாம் இன்றே பைல் செய்யப்பட்டு கலக்டருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறி என்னை அனுப்பிவிடுவார்.

அலுவலகம் வந்ததும் தலைமை எழுத்தர் பார்த்துவிட்டு அந்தந்த செக்ஷனுக்கு பைல்களை அனுப்புவார். எனக்கு பைல் வந்ததும் டைபிஸ்ட்டிடம் கொடுத்து டைப் செய்து fair copy for signature என்று எழுதப்பட்ட பேடில் வைத்துவிடுவேன். கையெழுத்தாகி வந்ததும் அன்றைய தபாலிலேயே அறிக்கைகளை கலெக்டருக்கு அனுப்பிவிடுவேன்.

அப்போது ஆர் டி ஓ ஆபீசில் தலைமை எழுத்தராக இருந்தவர் கே வி ராமச்சந்திர ஐயர். உச்சிக் குடுமி வைத்திருப்பார். அவருக்கு நாங்கள் வைத்த பெயர் கழுதை வால் ராமச்சந்திர ஐயர் என்பது. அரசல் புரசலாக அவர் இதைக் கேள்விப்பட்டிருந்தாலும் எங்களை ஒன்றும் செய்வதில்லை. ஆர் டி ஒ எங்களுக்கு வேண்டியவர் என்பது அவருக்குத் தெரியும்.

அலுவலகத்தில் 2வது கிளார்க்காக இருந்தவர் சுகவனம் என்பவர்.மிக நல்லவர், அனைவரிடமும் அன்பாக பழகுவார்,பேசுவார், தெரியாததைக் கேட்டால் சொல்லித்தருவார். அப்போது நான் ரெவின்யூ டெஸ்ட் 1,2,3 பாஸ் செய்திருந்தேன். சர்வே டிரைனிங் போது என் பெயர் சேர்க்கப்பட்டு கலெக்டரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதில் என் பெயரை அடிக்கோடிட்டு congratulation என்று எழுதி அனுப்பினார். உடனே டிரைனிங்கில் சேர பணியிலிருந்து என்னை விடுவித்தார். இன்று ஆங்கிலத்தில் நன்றாக என்னால் எழுத முடிகிறது என்றால் அது பசுபதி அவர்களிடம் நான் கற்ற பாடமே காரணம். அந்த நல்லவர் வல்லவரிடம் பணியாற்றும் பேறு கிடைத்ததை பெருமையாக எண்ணுகிறேன்.

No comments:

Post a Comment