Wednesday, March 18, 2015

மரண ஓலம்


அலைகடலின் ஆர்ப்பரித்து எழும் அலைகளின் ஓலத்தை கேட்டிருக்கிறோம். சுழன்றடிக்கும் சூறாவளியின் விர் விர் ரென்ற ஓலத்தை கேட்டிருக்கிறோம். மரங்களை வேருடன் பிடுங்கி எரியும் புயல் காற்றின் ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். வானத்தையும் பூமியையும் இணைக்கும் பெரு மழையின்  ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். மரணத்தின் ஓலத்தை யாராவது கேட்டதுண்டா?நான் கேட்டிருக்கின்றேன்.

நான் 50 வருடங்களுக்கு முன்பாக மரணத்தின் வாசலிலிருந்து மீண்ட நிகழ்வினை இங்கு சொல்ல விரும்புகின்றேன்.

அப்போது நான் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை பஞ்சாயத்து யூனியனில் கடன் வழங்கும் துணை வட்டாசியாளராகப் பணி செய்து கொண்டிருந்தேன். எனது மைத்துனன் -என் மனைவியின் தம்பி- பிரான்சிஸ் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். என் வீட்டிற்க்கு வந்திருந்தான். அவன் ஒரு சிறந்த பாட்மிண்டன் பிளேயர். எங்கள்  ஊரில் விளையாடி ஒரு மேஜை விளக்கை பரிசாக வாங்கி வந்திருந்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில்தான் இருந்தேன். சாயந்திரம் 4 மணி இருக்கும்.  கீழே வைக்க வயர் போதவில்லை என்பதால்  அவன் கொண்டுவந்திருந்த மேஜை விளக்கை என் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தேன். அவன் சுவிட்சைப் போட்டான். அவ்வளவுதான். என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. உதறியும் விளக்கு கையிலிருந்து விழவில்லை.

அப்போது என் குரலிலிருந்து ஒரு ஓலம் கிளம்பியது. அது மரணத்தின் ஓலம் என்பதை உணர்ந்தேன். இதைப் பார்த்து என்னிடம் ஓடி வந்து என்னைத் தொட்டான் என் மைத்துனன். தொட்டவன் தூக்கி எறியப்பட்டான்.

அந்த காலத்தில் சுவிட்சின் அடியில் ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருக்கும்.அதை  அணைத்துவிட்டால் கரண்ட் சப்ளை நின்றுவிடும். நான் பேச முடியாத நிலையில் சுவிட்சை சுட்டிக்காட்டினேன். அவன் அதை உடனே புரிந்து கொண்டு அதை அணைத்து விட்டான். கையிலிருந்த விளக்கு கீழே விழுந்தது. நான் உயிர் பிழைத்தேன்.

அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகின்றது. இப்போதும் 'நான் செத்துப் பிழைச்சவண்டா " என்ற எம் ஜி ஆர் பாடல் கேட்கும் போதெல்லாம் அந்த நிகழ்வு என் மனத்திரையில் காட்சியாக ஓடுகின்றது. நான் செத்துப் பிழைத்தவன்தான்.

நான் ஓலமிடும்போது தன் கையிலிருந்த குழந்தையை கீழே போட்டுவிட்டு 'ஏசுவே " என்று என் மனைவி குரல் கொடுத்தது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. என்னை சாவின் கரங்களிடமிருந்து ஏசுவின் கரம் மீட்டதை உணர்ந்தேன்.

Saturday, March 14, 2015

பி யு சின்னப்பா


தனது இனிய பாடல்களினால் பாகவதர் புகழ்பெற்றது போல திரு பி யு சின்னப்பாவும் தன் வசனம் பேசும் திறமையினாலும் நடிப்பினாலும் பாகவதருக்கு சமமான இடத்தைப் பெற்றார். தமிழக திரையுலக ரசிகர்கள் பாகவதர், சின்னப்பா இருவருக்கும் தனித்தனியே ஏற்பட்டனர்.


ஜுபிடர் நிறுவனம் தயாரித்த சவுக்கடி சந்திரகாந்தா என்ற படத்தில் சுண்டூர்  இளவரசன் என்ற கதாபாத்திரமாக சின்னப்பா நடித்தார். படம் 1936இல்  வெளிவந்தது. நன்றாக ஓடியது. சின்னப்பாஉவுகு நடிகர் அந்தஸ்து கிடைத்தது. சின்னப்பாவின் தந்தை உலக நாகபிள்ளை நாடக நடிகர். திருவிழாக்களில் நாடகங்கள் நடத்துவதில் புகழ் பெற்றவர். அவரது நடிப்புத்திறன் சின்னப்பாவிடம் நிறைந்து இருந்தது.



சின்னப்பாவை விட எம் ஜி ஆர் ஒரு வயது இளையவர். சின்னப்பா கதாநாயகனாக நாடகத்தில் நடித்துகொண்டிருந்தபோது எம் ஜி ஆர் அதில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது இன்றைய தலை,முறையினரால் நம்ப முடியாதது என்றாலும் அதுதான் உண்மை.



இதைத் தொடர்ந்து சின்னப்பா 1937,38,39 களில் ராஜமோகன், பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி, என்ற படங்களில் நடித்தார். படங்கள் சுமாராகவே ஓடின.



இதனால் மனம் வெறுத்து திரை உலகிலிருந்து விலகி ஆன்மீகத்தில் புகுந்தார். கோவில் கோவிலாக சென்றார். இவரது திரை வாழ்கையில் 1940 இல் அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. நடித்தத படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியைப் பெற்றன.



அலெக்சாண்டர் டூமாஸ் என்ற பிரபல நாவலாசிரியரின் தி மேன் இன் தி அயன் மாஸ்க்  என்ற நாவலைத் தழுவி உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸார் 1940 இல் வெளியிட்டனர். இதில் இரட்டை வேடங்களில் சின்னாப்பா நடித்தார்.  அதில் வில்லன் சின்னப்பா தனது தம்பியான நல்ல சின்னப்பாவிற்கு முகமூடியை தலையில் அணிவிப்பார். தாடி வளர வளர மூச்சு முட்டி உயிர் போய்விடும் என்று கூறி அட்டகாசமாக சிரிப்பார். சிரிப்பில் கூட அவரது நடிப்பு வெளிப்பட்டது. தியேட்டரே அதிரும்படியான கைத்தட்டலும் சீழ்க்கை ஒலியும் ரசிகர்களிடமிருந்து கிளம்பும். இந்தப் படத்தில்தான் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற பாரதியாரின் பாடலை சின்னப்பா பாடுவார். அன்றைய பிரிட்டிஷ் அரசு பாடலுக்குத் தடை விதித்தது. பாடல் நீக்கப்பட்ட பின் தடையும் நீங்கியது.



இந்த இமாலய வெற்றிக்குப் பிறகு சின்னப்பா நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களே. வெற்றிக்கன்னி  சின்னப்பாவின் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு அவரை புகழின் உச்சியைத் தொடச் செய்தாள்.



அடுத்து பட்கி  ராஜா பிலிம்சாரின் சூரிய மாலா சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து வெளிவந்த கண்ணகி மாபெரும் வெற்றிப்படமாக மட்டுமல்ல இளங்கோவனின் கவிதை நட வசனத்தினால் சிகரத்தை தொட்டது. சின்னப்பாவும் கண்ணாம்பாவும் போட்டி போட்டு நடித்தனர். என் எஸ் கே, மதுரம் நகைச்சுவை காட்சிகள் மேலும் மெருகூட்டியது. கொலைக் களத்தில் கோவலன் பேசும் வசனங்கள்  காலத்தால் அழியாத நினைவுகள்.



இந்தப் படம் வெளிவந்த போது நான் என் எம் போர்டு ஹை ஸ்கூலில் 9வது படித்துக்கொண்டிருந்தேன். நானும் எனது நண்பன் ராஜையாவும் தியேட்டர் வாசலில் அமர்ந்து படத்தின் வசனங்களை நோட்டில் எழுதினோம். நீண்ட காலம் அந்த நோட்டை பத்திரமாக வைத்திருந்தேன். இன்று நினைத்தாலும் அந்த வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்தப் படத்தில் சின்னப்பா பாடிய சந்திரோதயம் இதிலே காணுவது உன் செந்தாமரை முகமே என்ற பாடலும் மாதவியை பிரிய  காரணமாக இருந்த தேவமகள் இவள் யார்? என்ற பாடலும் என்றும் நினைவில் நிற்பவை.  இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு இணையான சூப்பர் ஸ்டாரானார் சின்னப்பா.



1944 இல் வெளிவந்த ஜகதலப்பிரதாபன்  சின்னப்பாவின் திரைவாழ்வின் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல் எனலாம். கர்ண பரம்பரை ராஜா ராணி கதைதான். சின்னப்பா முழுத் திறமையையும் வெளிப்படுத்திய வெற்றிப் படம். சின்னப்பாவின் நண்பனாக என் எஸ் கே நடிப்பார். சின்னப்பாவின் ஜோடியாக எம் எஸ் சரோஜினி, யூ ஆர்  ஜீவரத்தினம், எஸ் வரலட்சுமி, டி ஒ ஜெயலட்சுமி நடித்தனர். படத்தை இயக்குனர் ஸ்ரீராமுலு விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். கத்திச்சண்டை, மல்யுத்தம் ஆகிய காட்சிகளில் சின்னப்பா தனது முழுத் திறமையையும் காட்டியிருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் சின்னப்பா 5 வேடங்களில் மேடையில் கச்சேரி நடத்துவார். ஒரே காட்சியில் ஐந்து சின்னப்பாக்களைக் கண்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தனர். ஒரு வருடம் வரை ஓடிய சூப்பர் ஹிட் படம் இது.



இதன் பின் கே சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் விகடகவி ஏற்ன நகைச்சுவை சமூகப் படத்தில் நடித்தார். சின்னப்பா நடித்த ஒரே ஒரு சமூகப் படம் இதுதான். தன்னால் நகைச்சுவையாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். படம் சுமாராக ஓடியது. இந்தப் படத்தில் ஒரு புதுமை. எம் கே டி பாடிய பாடல் ஒன்று இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. இதன் பின் 1947 இல்  பங்கஜவல்லி என்ற படத்தில்  நடித்தார். சரியாக ஓடவில்லை. 1949 இல் வந்த மங்கையர்க்கரசி  ஒரு வெற்றிப்படம். தாத்தாவாக  தாடியுடன் மகனாக  மீசையுடன் பேரனாக  மீசை இல்லாமல் தோன்றுவார். ஒரு காட்சியில் இந்த மூன்று சின்னப்பாக்களும் தோன்றுவது அருமையாக இருக்கும்.



பாகவதரை வைத்து அசோக்குமார் என்ற படத்தை எடுத்த முருகன் டாக்கீஸார் சின்னப்பாவை வைத்து ரத்னகுமார் என்ற படத்தை 1949இல் எடுத்தனர். பானுமதி ஜோடியாக நடித்தார். மற்றும் எம் ஜி ஆர், என் எஸ் கே, மதுரம் நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சுவின் இயக்கம். இரு ஒரு மாயாஜாலக் கதை. சுமாராகவே ஓடியது.  "தவறான ஒரு சிறு சொல் கூட எனக்கு கோபத்தைக் கிளப்பிவிடும். நான் அசல் தமிழன். தன்மானம் மிக்கவன்" என்று சின்னப்பா இந்தப் படத்தில் அடிக்கடி  வசனம் பேசுவார். இவரது தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும்  பழகுவதற்கு இனியவர்.



நடிக மன்னன் என்ற பெயர் பெற்றவரும் வீரதீரச் செயல்களால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவருமான பி யு சின்னப்பா புதுக்கோட்டையில் உள்ள  தந்து வீட்டில் திடீரென 23-9-51 இல் மரணமடைந்தார். அவரது வீட்டிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையும் எழுப்பப்பட்டது.



 புதுக்கோட்டையில் இவர் வீடுகளை வாங்கிக் குவித்தபோது இவர் வீடுகள் வாங்குவதை வாங்குவதை புதுக்கோட்டை சமஸ்தானம் தடை செய்தது. இதே போல பாகவதர் திருச்சியில் வீடுகள் வாங்குவதையும் அரசாங்கம் தடை செய்தது. எதிரும் புதிருமாக வலம் வந்த இரு துருவங்களான இருவருக்கும் ஒரே மாதிரி நிகழ்வுகள் நடந்தது விசித்திரமான ஒற்றுமை இல்லையா?


சின்னப்பா இறக்கும் முன் சுதர்சன் என்ற படத்தில் நடித்திருந்தார். கொடியாக கண்ணாம்பாவும் யோக மங்கலமும் நடித்தனர். பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இதையும் எடுத்தனர். கதை வசனத்தை இளங்கோவனும்,எ எஸ் ஏ சாமியும் இணைந்து எழுதினார்கள். ஹரிதாஸ் படத்தை இயக்கிய சுந்தர் ராவ் நட்கர்நியும் சாமியும் இதை டைரக்ட் செய்தனர். சின்னப்பா இறந்த பிறகு வெளியிடப்பட்ட இப்படம் சுமாராகத்தான் ஓடியது. 

பிருதிவிராஜன் என்ற படத்தில் தன்னுடன்  சம்யுக்தையாக நடித்த நடிகை சகுந்தலாவை காதலித்து மணந்துகொண்டார் சின்னப்பா. திருமணத்திற்குப் பின் சகுந்தலா நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் ராஜா பகதூர்.

சினிமாவில் பேரும் புகழும் பெற்றவர்களின்  கடைசி காலம் வறுமையில்தான் முடிந்திருக்கிறது. இந்த சாபக் கேட்டிற்கு சகுந்தலாவின் குடும்பமும் விதிவிலக்காகி விட முடியுமா?

இத்துடன் தமிழக திரை உலகின் சமகாலத்தில் வாழ்ந்த பாகவதர், சின்னப்பா  என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வாழ்க்கை நிகழ்வுகள் முடிவு பெறுகின்றன. இந்த தகவல்கள் எல்லாம் பல பத்திரிகைகள், செய்திகளில் இருந்தும், என் நினைவிலிருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன. 

Monday, March 2, 2015

முதல் சூப்பர் ஸ்டார்.

எம் கே தியாகராஜ பாகவதர்.

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தனது இனிமையான பாடல்களினால் தனது வசீகரமான அழகினாலும் ஈர்க்கப்பட்டு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1934இல் வெளிவந்தது. 55 பாடல்களைக் கொண்ட இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கே சுப்பிரமணியம் இயக்கினார்.பிரபல நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் இவரது மகள்.

இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளில் 9 வெற்றிப் படங்களில் நடித்து சாதனை படைத்தார் பாகவதர். இவர் கன்னடத்து பிரபல பாடகி அஸ்வத்தம்மாவுடன் நடித்த சிந்தாமணி படம் 1937இல் வெளிவந்து வசூலைக் குவித்தது. அந்தப் பணத்தில் கட்டப்பட்டதுதான் மதுரை சிந்தாமணி டாக்கீஸ். இதை இயக்கியவர் பிரபல இயக்குனர் y v ராவ். இவர் நடிகை லட்சுமியின் தந்தை என்பது உபரித் தகவல்.

1937இல் எம் ஆர் சந்தான லட்சுமியுடன் நடித்த அம்பிகாபதி படத்தின் மூலம் வசனகர்த்தாவாக இளங்கோவன் முதன் முதலாக அறிமுகமானார். படத்தை இயக்கிவர் எல்லிஸ் ஆர் டங்கன் என்ற அமெரிக்கர். ஆங்கிலப் படமான ரோமியோ ஜூலியட் டுக்கு இணையாக எடுக்கப்பட்ட தமிழ் காவியம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

1937இல் வெளிவந்த திருநீலகண்டர்  பாடல்களுக்காகவே ஓடிய படம். இவர் பாடிய 'தீன கருணாகரனே நடராஜா' 'மறைவாய் புதைத்த ஓடு ' என்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆயின. 

அதே வருடம் வெளியான அசோக் குமார் படத்தில்தான் சித்தூர் வி நாகையா, பி கண்ணாம்பா தெலுங்கிலிருந்து முதன் முதலாக தமிழுக்கு அறிமுகமானார்கள்.  இதில்  பாகவதர் பாடிய  'உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ', 'சத்வகுனபோதன்', தியானமே எனது மனது நிறைந்தது' என்ற பாடல்கள் தமிழமெங்கும் பாடப்பட்டவை. இந்தப் படத்தில் எம் ஜி ஆர் பாகவதரின் நண்பனாக நடித்திருப்பார் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல்.

பட்சி ராஜா பிலிம்ஸின் ' சிவகவி' இதே ஆண்டு வெளிவந்தது. திரைக்கதை வசனம் இளங்கோவன். தமிழக திரை உலகின் கனவுக்கன்னி டி ஆர் ராஜ குமாரி முதன் முதலாக பாகவதருடன் நடித்தார் நாட்டியக்காரியாக.தமிழக மக்கள் 20,30 முறை பார்த்த இசைக் காவியம் இந்தப் படம்.

1944 தீபாவளியன்று வெளியான படம் ' ஹரிதாஸ்'. பிரபல பாடகி என் சி வசந்த கோகிலம் கதாநாயகியாகவும் டி ஆர் ராஜகுமாரி தாசியாகவும் நடித்த படம்.  பாகவதரின் 9வது தொடர் வெற்றிப் படம். பாடல்கள் பாபநாசம் சிவன். இசை ஜி ராமநாதன்.இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்னி. மூன்று தீபாவளிகளாக தொடர்ந்து  ஓடி வசூலை குவித்த படம்.

     இன்னும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதருக்கும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழகமே கண்ணீர் கடலில் மிதந்தது. பிரபல வழக்கறிஞர் திரு.எத்திராஜ் மூலமாக லண்டன் பிரிவு கவுன்சிலுக்கு அப்பீல் செய்யப்பட்டு 25-4-47 இல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாகவதர், கலைவாணர் இருவரும் சிறையில் இருந்த காலம் 2 வருடம் 2 மாதம் 13 நாட்கள்.

சிறையிலிருந்து திரும்பி வந்ததும் 1948இல் ராஜமுத்திரை என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.பிரபல பாடகி எம் எல் வசந்தகுமாரி பாடல்களைப் பாடி இருந்தார். கதாநாயகி திருமதி வி என் ஜானகி, எம் ஜி ஆரின் துணைவியார். கதை வசனத்தை பிரபல சிறுகதை ஆசிரியர் இக்கால சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடியான புதுமைப்பித்தன் எழுதினார். முடியும் தருவாயில் அவர் திடீரென்று மரணம் அடைந்ததால் மீதி வசனங்களை  நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார். படம் வெளிவரும் முன்னே இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தன. இசை சி ஆர் சுப்புராமன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆயின. இதில் எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி நடித்திருந்தனர். இந்தப்  படத்தில்தான் திருமதி பானுமதி தெலுங்கிலிருந்து தமிழ் திரைப் பட உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனாலும் படம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.10 வாரங்களே ஓடியது.பாகவதர் மனம் தளர்ந்தார். பாகவதரின் திரை உலகின் முதல் தோல்வி இதுவே.

இருந்தாலும் தனது 11வது படமான அமரகவியை தயாரித்தார். டி ஆர் ராஜகுமாரி, பி எஸ் சரோஜா ஜோடியாக நடித்தனர். இசை ஜி ராமநாதன். வசனம் பாடல்கள் கவிஞர் சுரதா. இதில்தான் அவர் அறிமுகமானார்.

பாகவதரின் 12வது படம் சியாமளா. தெலுங்கில் எஸ் வரலட்சுமி கதாநாயகியாக நடித்த படத்திலோ கதாநாயகனை நீக்கிவிட்டு பாகவதரை நடிக்கச் செய்து தமிழில் தயாரித்தனர். இதில் பாகவதர் பாடிய ' ராஜான் மகாராஜன்' என்ற பாடல் பிரபலமாகியது. பாகவதர் மீசையுடன் நடித்த ஒரே ஒரு படம் இதுவே. படம் ஓடவில்லை.

பாகவதரின் 13வது படம் 'புதுவாழ்வு'. இதை இயக்கம் பொறுப்பை பாகவதரே ஏற்றார். லலிதா இதில் ஜோடியாக நடித்தார். மாதுரி தேவி, டி எஸ் பாலையா, என் எஸ் கே , மதுரம் இதில் நடித்தனர். படம் சுமாராகவே ஓடியது.

பாகவதரின் கடைசிப் படம் சிவகாமி.இதில் ஜி வரலட்சுமி ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிரபல நடிகர் ஜக்கையா, நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ இளம் ஜோடியாக நடித்தனர்.படம் சுமாராக ஓடியது.

பாகவதர் என்ற  தமிழக திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தொடர்ந்து 9 வெற்றிப் படங்களை தந்து தனது இனிய இசையால் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்ட ஏழிசை மன்னர். மன்னர் போலவே அரண்மனை கட்டி வாழ்ந்தவர். மறைந்து விட்டாலும் மக்கள் அவரை அவரது நினைவுகளை மறந்துவிடவில்லை. அவர் வசித்த திருச்சியில் உள்ள வீட்டில் தற்போது மாவட்ட போக்குவரத்து அலுவலகம் செயல்பல்டுகிறது. பாகவதர் பங்களா ஸ்டாப்  என்றே அது இன்றும் அழைக்கப்படுகிறது. பெயரே பாகவதர் பங்களா. திருச்சியில் பாகவதர் காலனி ஒன்றும் இருக்கிறது. சிறையிலிருந்து திரும்பிய பிறகும் இவர் நம்பிக்கையை இழக்கவில்லை. சாம்பலில் இருந்து மீண்டுஎழும் பீனிக்ஸ் பறவையைப் போல தோல்விகளை எல்லாம் மிதித்து வெற்றி நடை போட்டார். இவரைப் பற்றிய இன்னொரு செய்தி கூட கூறப்படுகிறது. அதாவது இவர் சாப்பிடும்போது சூடான சாதத்தில் தங்க ரேக்குகளை வைத்துவிடுவாராம். அவை அந்த சூட்டில் கரைந்து உணவுடன் கலந்து விடுமாம். அதை அப்படியே சாப்பிடுவாராம். அதனால்தான் அவரது மேனி பொன்னிறத்தில் இருந்ததாம். இது கற்பனையாகக் கூட இருக்கலாம். அல்லது இவரது வசீகரத்திற்கு அதிலும் பெண்களை கவர்ந்திழுக்கும் அழகுக்கு காராணமாகவும் இருக்கலாம் இல்லையா?